( 27.06.2019 அன்று எழுதப்பட்டது )
சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலுக்கு முன், தனியார் தொலைக்காட்சி ஒன்றில், சில தோழமைக் கட்சிகளின் கூட்டம் ஒளிபரப்பப் பட்டுக்கொண்டிருந்தது. அந் நிகழ்ச்சியின் முடிவில் சில பார்வையாளர்கள் திடீரென முன்னறிவிப்பின்றியும் காரணமேதுமன்றியும் குட்டப்பட்டது போல் உணர்ந்திருப்பார்கள். ஒரு அரசியல் தலைவர் வீரவாள் என்ற சொல்லை உபயோகப்படுத்திய மறு கணம் மற்றோர் தலைவர் வீரவாள் என்று சொல்லி ‘அவாளை’ அழைத்துக் கொண்டு வந்துவிடாதீர்கள் என்றவுடன் மேடையில் ஆமோதிப்பாகச் சிரிப்பலைகள் கிளம்பின. பொதுப்பிரிவில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு (10% reservation for economically weaker section in general category) செய்யும் மத்திய அரசின் சமீபத்திய திட்டத்திற்கான எதிர்ப்பு ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் தலையில் குட்டாக விழுந்தது. காலப்போக்கில் நிகழ்ந்துவிட்ட மாற்றங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் பொதுவாக அனைவரும் முன்னேறுவதற்கான வழிகளைத் தேட வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பது அனைவரும் அறிந்ததே. உதாரணத்திற்கு கம்பெனி சட்டம், 1956 என்பது பல வருடங்கள் அமலில் இருந்தது. பின்பு 2014ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி முதல் கம்பெனி சட்டம், 2013 அமலுக்கு வந்தது. புதிய சட்டத்தின் அனைத்து அம்சங்களும் படிப்படியாக நடைமுறைக்கு வந்த பின்னரும் பழைய சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் காலப்போக்கில் தீர்ந்தொழிந்த பின்னரும் முந்தைய சட்டத்தின் ஒவ்வாத அம்சங்கள் தொடர்ந்து சாடப் படுவதில்லை.
இந்தியா என்றோ அல்லது இந்துமதம் என்றோ குறிப்பிட்டுச் சொல்லுவதற்கு ஏதுமன்றி உலகின் அனைத்து நாடுகளும் மற்றும் அனைத்து மதங்களும் பழங்காலங்களில் ஏதோ சில விதங்களில் மனிதர்களைப் பாகுபடுத்தியிருக்கிறார்கள்; பிறகு காலப் போக்கில் புரட்சிகள் வெடித்து ஏற்றத் தாழ்வுகளின் சமனங்கள் நிகழ்ந்து வருகின்றன என்பது உலகம் அனைத்துக்கும் பொருந்திய பரவலான சரித்திர உண்மை.
ஒரு சட்டம் என்பது எழுத்து பூர்வமாக இருப்பதால் அதன் மாற்றத்தை நாம் எளிதில் உணர்கிறோம். ஆனால் மதக் கொள்கைகளில் மாற்றம் என்பது எங்கும் எழுதப்படாததால் மாற்றத்தை நாம் இதர சான்றுகளால்தான் உணரவேண்டும். ‘இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி’ என்ற உரைகல்லில் வைத்துப் பார்க்கும் போது சாதிப் பாகுபாட்டைச் சாடிய புலவர்களையும் அறிஞர்களையும் அவர்களது இலக்கியங்களையும் மக்கள் கொண்டாடுகிறார்கள் என்கிற பொதுவான போக்கு மதக் கொள்கைகள் மாறிவிட்டன என்பதற்கு இரட்டைச் சான்றளிக்கிறது. ஆனால் இது பாதி டம்ளர் நிரம்பியதைப் போல்தான் என்று கூறலாம். தமிழகத்தில் குறிப்பிட்ட வகை ப்ளாஸ்டிக் பைகள் இந்த ஆண்டின் முதல் தேதியிலிருந்து தடை செய்யப்பட்டிருந்தும் ஆறுமாத காலமாகியும் அவை தாராளமாகப் புழங்கிக் கொண்டிருக்கின்றன. இதில் எப்படி குறிப்பாகவோ அல்லது பொதுவாகவோ எந்தப் பிரிவினரையும் சுட்டிக் காட்டி குற்றம் சாட்ட முடியாதோ அது போல மதம் சார்ந்த கொள்கைகளிலும் முழுமையான பார்வைகளும் அணுகுமுறைகளுமே பயனளிக்கும்.
தற்காலத்தில் தமிழர்கள் அனைவருமே சாதிப் பாகுபாடின்றி ‘என்ன நேர்ந்து விட்டது தமிழர்களுக்கு?’ என்று கவலைப்பட வேண்டிய காலகட்டத்திலிருக்கிறார்கள். இதை வெட்ட வெளிச்சமாகக் காட்டியது இந்த வருடம் (2019) மே மாதம் 30ஆம் தேதி அன்று பதவி ஏற்றுக்கொண்ட 17வது லோக்சபாவின் மந்திரிசபைப் பட்டியல்! அறுபது வருடங்களுக்கும் மேலான காலத்தில் முதல் முறையாக தமிழ்நாட்டு உறுப்பினர்கள் இடம் பெறாமல் ஒரு மத்திய மந்திரிசபை பதவி ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதை செய்தித் தாள் சுட்டிக் காட்டியது. பிரதம மந்திரியைத் தவிர 57 மந்திரிகள் அடங்கிய அந்தப் பட்டியலில் ‘நிர்மலா சீதாராமன்’ மற்றும் ‘சுப்பிரமணியம் ஜய்சங்கர்’ என்ற இரண்டு பெயர்களைத் தவிர பெரும்பாலான மற்ற பெயர்களை எளிதில் படிக்கவோ அல்லது உச்சரிக்கவோ முடியவில்லை! அந்த இருவரையும் தமிழர்கள் என ஏற்றுக்கொள்ள முடியாது என்பதாகச் சிலர் கூறி வருவது வேறு விஷயம்!!
ஒரு காலத்தில் ஐஐடி நுழைவு, ஐஏஎஸ் இறுதி முதலிய அகில இந்தியத் தேர்வுகளின் முடிவுகளில் முதலிடங்களிலும் அதிக எண்ணிக்கைகளிலும் காணப்பட்ட தமிழ்நாட்டுப் பெயர்களை தற்போது குறைவாகவே பார்க்க முடிகிறது. உதாரணத்திற்கு, 2019ல், மருத்துவப் படிப்பிற்கான ‘நீட்’ (NEET) நுழைவுத் தேர்வில் தமிழ்நாட்டில் முதலாவதாக வந்த மாணவர் (குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் மாணவி) அகில இந்திய அளவில் 57வது ரேங்கிலும் ஐஐடிக்களில் பொறியியல் படிப்பிற்கான உயர்நிலைக் கூட்டு நுழைவுத்தேர்வில் [JEE(advanced)] தமிழ்நாட்டில் முதலாவதாக வந்த மாணவர் அகில இந்திய அளவில் 33வது ரேங்கிலும் இடம் பெற்றிருக்கிறார்கள். சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாக நிலவரம் இப்படித்தான் இருக்கிறது. தமிழ்நாட்டின் கிராமப்புறத்திலிருந்து வருபவர்களும் மற்றும் சமூக ரீதியாகப் பின்தங்கியவர்களும் நுழைவுத் தேர்வுகளைச் சிறப்புறச் செய்ய இயலாததே இதற்கான காரணம் என்கிறார்கள். இது ஒரு தவளைக் கதையை நினைவூட்டுகிறது. ஆழமான கிணற்றின் அடியிலிருந்த சில தவளைகளுக்கு மேலே வருவதற்கான ஒரு போட்டி வைக்கப்பட்டதாம். ‘அவற்றால் மேலே வர முடியாது ’ என்று எழும்பிய கூக்குரல்களைக் கேட்டுப் பல தவளைகள் முயற்சிகளைக் கைவிட்டு விட ஒரு தவளை மட்டும் காது கேட்காததால் அநாயாசமாகத் தத்தித் தத்தி மேலே வந்ததாம். நுழைவுத் தேர்வுகளைத் தமிழ் நாட்டு மாணவர்கள் சிறப்புறச் செய்யமுடியாது என்ற வாதத்தைக் கிராமம் அல்லது நகரம் என்ற வேறுபாடின்றியும் சமூகப் பாகுபாடின்றியும் தமிழ் நாட்டின் அனைத்து மக்களும் செவிமடுக்கிறார்கள் என்பதையே தற்போதைய நிலவரம் காட்டுகிறது! ‘குன்றின் மேலே செல்வதை விட இறங்கும் பாதை எளிது’ அல்லவா? நுழைவுத் தேர்வுகளின் முடிவுகள் மட்டுமே கவலையளிக்கின்றன எனச் சொல்லிவிட முடியாது. தமிழ் மொழியைப் பிழையின்றி உச்சரித்துப் பேசுவதும் எழுதுவதும் கூட வேகமாகக் குறைந்துவருகிறது. அநேகமாக ‘ல்’ என்ற உச்சரிப்பை ஒழித்து அதை ‘ள்’ கூட ஐக்கியமாக்கி விட்டார்கள் என்பது பெரும்பாலான தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் ‘பொங்கல்’ என்பதைப் ‘பொங்கள்’ என்று உச்சரிப்பதிலிருந்து அறிகிறோம். ஒரு விதத்தில் இப்படி எல்லோரும் சமதளத்திற்கு (level playing field) வந்துவிட்டது நல்லதுதான்! இங்கிருந்து அனைவரும் முன்னேறுவதற்கான வழியைக் காண்போம்.
‘நீட்’ தேர்வைப் பற்றிப் பேசும் போது திருவள்ளுவர் மருத்துவத்தைப் பற்றி என்ன கூறுகிறார் எனப் பார்ப்போம்.
‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்’
என்னும் குறளில் நோயின் தன்மையை ஆராய்ந்து அதன் காரணத்தை ஆராய்ந்து அதைத் தணிக்கும் தன்மையை ஆராய்ந்து உடலுக்குப் பொருந்தும்படியாக மருத்துவர் செயல்பட வேண்டுமெனக் கூறுகிறார். ‘ஆராய்ந்து’ என்ற பொருளைக் கொடுக்கும் ‘நாடி’ என்ற சொல் இக் குறளில் மூன்று முறை வருகிறது. இதே போல்
‘உற்றான் அளவும் பிணி அளவும் காலமும்
கற்றான் கருதி செயல்’
என்ற குறளில் மருத்துவர் நோயாளியின் வயதையும் நோயின் அளவையும் காலத்தையும் ஆராய்ந்து செய்யவேண்டும் எனக் கூறும் போது ‘கருதி’ என்ற சொல்லில் அழுத்தம் தருகிறார். அதாவது மருத்துவப் பணியில் சிந்தித்துச் செயல்பட வேண்டியது அவசியம் என்கிறார் வள்ளுவர். இந்தச் சிந்தனைத் திறனைப் பன்னிரண்டாம் வகுப்புப் பாடங்களின் மீது செலுத்திப் பாடங்களை நாடியும் கருதியும் மற்றும் ஆராய்ந்தும் படித்தால் அதுவே ‘நீட்’ தேர்வை வசப்படுத்திக்கொள்வதற்கான வழியல்லவா! முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைக்காவிட்டால் கூட ஒரு வருடம் முழுவதும் பயிற்சி செய்து அடுத்த வருடம் எழுதுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
மேலும் தொழில்முறைப் படிப்புக்களில் அவ்வளவு சுலபமாக வெற்றியை எதிர்பார்க்க முடியாது என்பது வணிகத்துறை சார்ந்த சிஏ (CA), சிஎம்ஏ (CMA), சிஎஸ் (CS) போன்ற படிப்புகளின் பரீட்சைகளில் பத்து சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெறுகிறார்கள் என்பதை எண்ணிப் பார்த்தால் புரியும். அப் படிப்புகளின் பரந்து விரிந்த மற்றும் அதி வேகமாக மாறுதல் அடையும் தன்மை வாய்ந்த பாடத்திட்டங்களை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ‘நவில்தொறும் நூல்நயம் போல’ என்ற குறளின் சொற்றொடர்க்கேற்பப் புதுப்புது நுணுக்கங்கள் புலப்படும். சிலமுறை, ‘நல்ல வேளை, இந்த நுணுக்கம் புரியாமல் நான் பாஸ் செய்யவில்லை’ என்று மாணவர்களுக்கு ஆறுதலாகக் கூட இருக்கும்! இப்படிப் புது நுணுக்கங்கள் புலப்படுவதற்குள் முன்பு புரிந்து படித்தவை நீறுபூத்த நெருப்பு போல் ஆகியிருக்கும்!! ஆக எந்தத் தொழில்முறைப் படிப்பிலும் உள்ளே நுழையவும் வெற்றிகரமாக வெளியில் வரவும் அதிக முயற்சியே தேவையாக இருக்கிறது.
இந்த முயற்சியையும் வெற்றியையும் பற்றித் திருவள்ளுவர் என்ன கூறுகிறாரெனப் பார்க்கலாம். மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு நெட்டுருப் போட்டுப் படிக்கும் சாத்தியமுள்ள பன்னிரண்டாம் வகுப்பின் மதிப்பெண்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமா அல்லது மூளையைச் சற்றாவது கசக்கிக் கொண்டு எழுதத் தேவையுள்ள நுழைவுத் தேர்வின் மதிப்பெண்களையும் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டுமா? வள்ளுவரின் பதில் இதோ:
‘கானமுயல் எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது’
என்கிற குறள் மூலமாக ‘காட்டில் ஓடும் முயலை நோக்கிக் குறி தவறாமல் எய்த அம்பை விட வெட்டவெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது’ என்கிறார். நன்கு தயார் செய்து எழுதிய நுழைவுத் தேர்வில் தவறி விடுவது என்பது எப்படிச் சிறப்பாக இருக்கக் கூடும் என வினா எழும்பலாம். பாடத்தைப் புரிந்துகொண்டு படித்த அந்த மாணவர் ஒரு நல்ல கல்லூரியில் சேர்ந்து இளம் அறிவியல் எனப்படும் பி.எஸ்சி (B.Sc) படிப்பில் உன்னதமான முறையில் தேர்ச்சி பெற்று வெளியில் வந்தால் ஐஐஎம் (IIM), ஐஐடி (IIT), பெங்களூருவின் ஐஐஎஸ்சி (IISc) போன்ற உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் மேல் படிப்பைத் தொடரமுடியும் என்பதே அதற்கான விடை.
‘நீட்’ நுழைவுத் தேர்வின் முடிவுகள் வந்தபிறகு தோல்வி காரணமாக ‘தற்கொலை ’ போன்ற தவறான முடிவுகளுக்குச் செல்லாமல் இருக்கப் பெற்றோர்கள் பொறுப்பெடுத்துக் கொள்ளவேண்டும். சமூகத்தில் செல்வாக்கிலிருப்பவர்கள் அச் செயலை நியாயப் படுத்திப் பேசக்கூடாது. இத்தனை கால வாழ்க்கையில் நாம் அனைவரும் பாகுபாடின்றி ஒன்று புரிந்து கொண்டிருப்போம். குறிக்கோள்களை நோக்கி முன்னேறும் போது சில தடவைகள் நாமே செயல்முறையில் சொதப்பிவிட்டாலும் அல்லது பல தடவைகள் முற்றிலும் மாறாகப் பலன் கிடைத்தாலும் வாழ்க்கையில் மேலும் சில பல வாய்ப்புக்கள் காத்துக் கொண்டிருக்கின்றன என்பதே அது. இதைக் குழந்தைகளுக்குப் புரியும்படிச் சொல்லிக் கொண்டிருந்தால் அவர்கள் சரியான வழியிலேயே செல்வார்கள். தேர்வுக்குத் தயார் செய்யும் வரை ‘டாப் கியர்’ (top gear), பின்பு தேர்வின் முடிவு வரும் போது கியர் மாற்றம் என்ற சுழற்சிக்கு மாணவர்கள் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டால் அது வாழ்க்கைக்கும் பயனளிக்கும்.
இறுதியாக, தமிழகத்தில் அவ்வப்போது பேசப்படும் நிலைப்பாடுகளான ‘சனாதன தர்மத்திற்கு எதிர்ப்பு’, ‘ஹிந்தி கற்பதால் நேரக்கூடிய கலாசார சீரழிவு’ போன்ற சொற்றொடர்கள் பாரபட்சம் நிறைந்தவை (prejudiced) என்பதைச் சுருக்கமாகச் சுட்டிக் காட்ட விழைகிறேன்.
‘சனாதன தர்மம்’ என்பதன் பொருள் எப்போது தோன்றியது என்று அறிய முடியாத பழமையும் தொடர்ச்சியுமுள்ள (eternal) மதம் என்பதே. ஆக, மூத்த தமிழ்க் குடியை வருணிக்க உபயோகிக்கப்படும் ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய’ என்ற சொற்றொடர்க்கும் ‘சனாதன’ என்ற சொல்லுக்கும் ஒரே பொருளே. பழமைக்குப் பழமையான மதமாக இருந்தாலும் யாரையும் மதம் மாற்றி இங்கு அழைத்துவரத் தேவையில்லை என்பது போன்ற பெருமையான அம்சங்களும் இருப்பதால் சனாதன தர்மத்தைக் குறிப்பாக எதிர்க்கவோ வெறுக்கவோ ஏதுமில்லை.
ஹிந்தி கற்பதால் கலாசார சீரழிவு ஏற்படக் கூடும் என்று நினைப்பவர்கள் நாட்டில் வெகு காலமாக நிகழ்ந்து வரும் வேறு சில கலாசார சீரழிவுகளையும் எண்ணிப்பார்ப்பது நலம். உதாரணத்திற்கு, நாளும் தொலைக்காட்சியின் வீடியோ காமிரா முன் மக்களை அலறவிட்டுச் செய்திகள் சேகரிப்பது தற்காலத்தின் வாடிக்கையாகி விட்டது. இவற்றைக் கவனித்து வளர்ந்துவரும் குழந்தைகள் வாழ்க்கையை நம்பிக்கையுடன் அணுகுவார்களா என்பதைச் சமூகப் பொறுப்புள்ளவர்கள் சிந்தித்துச் செயலாற்றவேண்டும்.இவ்வாறான பல சவால்களுக்கிடையில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ‘இனி ஒரு விதி செய்வோம்’ என்ற பாரதியாரின் வழிகாட்டுதலையும் ‘புதியதோர் உலகம் செய்வோம்’ என்ற பாரதிதாசனின் அழைப்பையும் ஏற்று ஒன்றாகச் செயல்பட்டு முன்னேறுவோமாக. மாணவர்கள் தங்கள் கவனத்தைக் கல்வியில் செலுத்துவதற்கு ‘இளமையில் கல்’ என்ற ஔவையாரின் வார்த்தைகளும் தரமாகக் கற்பதற்குக் ‘கற்க கசடற’ என்ற திருவள்ளுவரின் வார்த்தைகளும் துணைபுரியட்டும்.